இதயம் - 45
இதயம் 45
ஊட்டியிலிருந்து முகம் கொள்ளா வெட்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் வந்த தன் மக்களை மன நிறைவுடன் கண்டார் சாந்தி. இது போதுமே அவருக்கு வேற என்ன அவர்களிடம் பெருசாக எதிர்பார்த்து விடப் போகிறார்.
இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் அக்காவின் வன்மம் கொஞ்சம் உறுத்தியது அவருக்கு.'இந்த அளவுக்கு அவள் இறங்குவாளா?' என்று இன்றும் அவரால் நம்ப முடியவில்லை.
உண்மை தெரிந்தும் உறவுகளுக்குள் விரிசல் வரக் கூடாது என்று மறுநாளே சென்று சாந்தி சரஸ்வதியிடம் மன்னிப்பு கேட்க, அவரோ மறைமுகமாக" அவ இருக்க வீட்டில நான் வரவே மாட்டேன்"என்று பிடிவாதம் பிடித்தார். அவர் பிடிவாதத்தை ஒரு பொருட்டாக மதிக்காத சாந்தி வீட்டுக்கு வந்து விட, பெருத்த ஏமாற்றம் சரஸ்வதிக்கு தான்.
அக்காவின் பிடிவாதம் அவருக்குள் பயத்தையும் வருத்தத்தையும் கொடுக்க, அவர் முகத்தில் வலியின் சாயல் தெரிந்தது.
சாந்தியின் முகத்தில் சோகத்தை கண்டவளுக்கு ஏனோ உள்ளுக்குள் அறுத்தது. 'அன்று தான் பேசி சென்றதன் விழைவு தான் அவர் வீட்டை சென்றதுக்கும் அத்தையின் சோகத்துக்கும் காரணமோ' என்று எண்ணியவள் சாந்தியிடம் சென்று மன்னிப்பு கேட்டாள்.
"ஸாரி அத்த, பெரிய அத்தை கிட்ட நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. அவங்க என்னால தான வீட்ட விட்டு போனாங்க... நான் வேணா ஒரு ஸாரி கேட்டு அவங்கள இங்க கூட்டிட்டு வரட்டுமா?" வெகுளியாக எதுவும் அறியாத சிறுமி போல கேட்டவளைக் கண்டு அவருக்கு மனம் இலகுவானது. கணம் சுமந்த மனம் கூட பறப்பது போல இருந்தது .
இந்த சிறு பெண்ணிடம் உள்ள பக்குவம் கூட அக்காவிடம் இல்லயே ! இவளும் அவர் வேண்டும் என்று மன்னிப்பு கோர தயாராக இருக்கிறாள். ஆனால் அவரோ இவள் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறார். உண்மை தெரிந்தால் இவள் மனம் என்ன பாடு படுமோ !'என நினைக்கவே பயமாக இருந்தது அவருக்கு.
"அதெல்லாம் வேண்டாம் டா ! நம்மல புரிஞ்சிக்காதவங்க கிட்ட ஓரளவு சொல்லி புரிய வைக்கலாம். புரிஞ்சுக்கவே மாட்டேன் அடம்பிடிப்பக்கறவங்க கிட்ட என்ன சொல்றது சொல்லு ! விடுடா அக்கா வா வருவா !" என அவளை சமாதானம் செய்ய" அப்போ நீங்களும் அப்படியே நினைச்சிட்டு சந்தோசமா இருக்கணும்... நீங்க முகத்த சோகமாக வச்சிகிட்டு இருந்தா நாங்க எப்படி ஹாப்பியா இருக்கிறது சொல்லுங்க ?"எனவும் அவள் கன்னம் கிள்ளி அழகாய் சிரித்தவர் அவளை கட்டிக் கொண்டார்.
அடுத்த வந்த நாட்களில் எல்லாம் அந்த வீடு அமைதியாகவும் இரவில் மட்டும் குடும்பமாக அமர்ந்து பேசி சிரிக்கவும் என கழிந்தது. அவர்களுக்குள் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன
.
அதிலும் சரஸ்வதி சென்றதில் யாருக்கு நிம்மதி கிடைத்ததோ இல்லையோ சைத்துவிற்கு கிடைத்தது . அவர் இல்லாததால் மனைவியிடம் குற்றவுணர்வு இல்லாமல் நெருங்க முடிந்தது அவனால்.
அவரிடம் செய்து கொடுத்த சத்தியம் மனதின் ஓரத்தில் துளிர்ந்தாலும், அதை புறம் தள்ளிவிட்டு மனைவியுடன் காதல் சரசங்களில் பெரும் ஈடுபாடுடன் அவனிருக்க 'சைத்து வா இது?' என தினமும் ஆச்சர்யப்பட்டு போனாள் பெண்ணவள். அவளை தினமும் காதலில் திக்குமுக்காட வைக்க, போதும் போதுமென்றானது அவளுக்கு.
அவளது வாழ்க்கை சீராகச் செல்ல, அதை கண்ட விஷ்ணு மகிழை காட்டிலும் எகாந்த்துக்கு தான் அதில் முழு திருப்தி இருந்தது. வைஷு, அவனுக்கு தோழி என்றாலும் அவளை தனது
மகளாக தான் நினைத்தான். சைக்கோ(சைத்து)வை கட்டிக் கொண்டு மகள் என்னவாகப் போகிறளோ என்ற அச்சம் அவனுக்குள் எழாமல் இல்லை. ஆனால் இன்று அவள் காதலோடும் மகிழ்ச்சியோடு வாழ்க்கைவதை கண்டு உள்ளுக்குள் எழுந்த பயம் நீங்கியது. வெறும் காதலோடு மட்டும் அவளோடு இல்லாம் அவள் செய்யும் அனைத்திற்கும் துணையாக நிற்பதை கண்டு சைத்துவின் மேல் மதிப்பு ஏற்பட்டது அவனுக்கு. இருவரும் சகஜமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
நால்வர் மட்டும் புலனத்தில் க்ரூப் ஒன்று ஆரம்பித்து வேலை இல்லாத நேரத்தில் மொக்கை போட்டுக் கொண்டு கிடப்பார்கள். அதில் எகாவும் சைத்துவும் பெண்கள் இருவரையும் கலாய்க்க, பெண்கள் இருவரும் அவர்களை கலாய்ப்பார்கள்.
குழந்தையை பற்றி ஸ்கேன் ரிப்போர்ட்டை புலனத்தில் க்ரூப்பில் அவன் போட்டு விடுவான். அதை வைத்து மொக்கைப் போட்டு அவனை கலாய்த்து எடுப்பார்கள். அன்று கூட நான்காம் மாதத்தில் குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்த்துவிட்டு அதை க்ரூப்பில் போட்டு விட, அதை பத்தி பேசுவிட்டு அவர்கள் உறங்கச் செல்ல், அதையே பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷு.
தன் தோளில் சாய்ந்து புலனத்தில ஸ்கேன் ரிப்போர்டில் அசையும் குழந்தையைப் பார்ப்பதை கண்டவன் அவள் தலையை வருடிய படி கேட்டான்.
"என்னடி அதையே பார்த்துட்டு இருக்க? என்னாச்சி?" எனக் கேட்கவும் போனை பக்கவாட்டில் வைத்து விட்டு, அவள் நெஞ்சில் சாய்ந்து படுத்தவள் தன் வயிற்றை தடவி, " எனக்கும் இதே போல என் வயித்துல இருக்க குழந்தைய ஸ்கேன்ல பார்க்கணும் ஆசையா இருக்கு சைத்து"என்றாள்.
"அதுக்கு தானே செல்ல குட்டி நாம தினமும் பேசுறோம்...!"
"பேசிறோம் தான்... ஆனாலும் நமக்கு எல்லாம் சரியா நடக்கும் தான சைத்து... நாமளும் குழந்தை பெத்துப்போம் தான?"ஏக்கமாக கேட்க, "ஏன் உனக்கு இந்த தேவை இல்லாத பயம் வைஷு மா. நம்ம வேலையை நாம சரியா செஞ்சோம்னா அதுக்கான பலன் சீக்கிரமாக கிடைக்கும் ! வேணும் நாம இன்னைலிருந்து தீவிரமா பேசுவோமா?? அதாவது நேரம் காலம் பார்க்காம பேசினோம்னா சீக்கிரத்துல அதுக்கான பலன் கிடைக்கும் சொல்றேன். நீ என்ன சொல்ற?"என ஜொள்ளு வடிய சொன்னவனை கண்டு அவனை போல சிரித்து காட்டி,
"சார், இப்போ மட்டும் என்ன பண்றீங்க? நேரம் காலம் பார்த்து தான் பேசிறீங்களாக்கும் போடா !"என்றிட,
"மனைவியோட ஆசையை நிறைவேத்த நான் ஓ. டி பார்க்கறது தப்பில்லையே செல்ல குட்டி !"என ஒரு மார்க்கமாக சொல்லி அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் தன் பே(இ)ச்சுகளை தொடர்ந்தான்.
*****
நாட்கள் மெல்ல நகர்ந்தன . சைத்து தனது டான்ஸ் வோர்ல்டை பெரிய அளவில் மாற்ற, இன்னொரு பிரான்ச் தொடங்க, இடத்தை தேடி அலைந்தவனுக்கு அதிர்ஷ்ட வசமாக மதுரையில் முக்கிய இடத்தில் காம்பிளக்ஸாக இருக்கும் அந்த வளாகம் முழுவதும் கிடைக்க இருந்தது. அவனுக்கும் அதை விட மனமில்லை பேசி அட்வான்ஸ் கொடுத்து விட்டாலும் பணத்திற்காக கொஞ்சம் அலைந்து கொண்டிருந்தான்.
வீட்டில் யாருக்கும் அந்த விஷயம் தெரியாது வைஷுவிற்கு கூட அவன் சொல்ல வில்லை. அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க எண்ணினான்.
லோன் கேட்டு வங்கி வங்கியாக அலைய கிடைத்த பாடில்லை.
வீட்டினர் யாரிடமும் பணம் கேட்க அவனுக்கு விருப்பம் இல்லை. சுயமாக எதையும் செய்ய நினைத்தான். ஆனால் அவனால் பணத்தை திரட்ட முடியவில்லை...
சாய்க்கு இவ்விஷயம் தெரிய வர அவனைக் கடிந்து கொண்டவன், அவனுக்கு உதவ முன் வந்தான்.
தான் வேலை செய்யும் வங்கியில் அவனுக்கு லோன் வாங்கி கொடுத்தான். ஆனாலும் பணம் போதாமல் இருக்க அம்மாவிடம் கேட்கலாம் என்றான்.
சைத்துவோ கொஞ்சம் யோசித்தான். வேறு வழியின்றி அண்ணனின் வற்புறுதலுக்காக சரஸ்வதியை காணச் சென்றான்.
"வாடா சைத்து. உனக்கு இப்போதான் இந்த பெரியம்ம நியாபகம் வருதா? உன் அம்மா தான் மறந்துட்டானா நீயும் மா !"என அவன் முன்னே கண்ணீர் வடிக்க, அவரை பார்க்காது பேசாதது தப்பு என்று தோன்றியது. கொஞ்சம் சங்கட்டமாக உணர்ந்தான்.
"ஸாரி பெரியம்மா ! இந்த காம்பிளக்ஸ் வேலை நிறைய அலைசஞ்சுட்டேன் மா. சாய் சொன்னான இல்லையா ? இது என் கனவு பெரியம்மா, சொந்த இடத்துல என் டான்ஸ் வோர்ல்ட் வைக்கணும். அதுக்காக அலைஞ்சுட்டு இருக்கேன் பெரியம்மா ! எப்படியாவது அந்த இடத்தை வாங்கி ! என் டான்ஸ வோர்ல்ட் கொண்டு வரணும். அதை இன்னும் கொஞ்சம் பிரபலமாக்கணும். அதுக்காக நாய் மாறி அலைஞ்சிட்டு இருக்கேன். வீட்ல இருக்க யாருக்கும் தெரியாது பெரியம்மா ! என் கனவு மட்டும் தான் இப்பதைக்கு முக்கியம்னு ஓடிட்டு இருக்கேன்"என்று தன்னிலை எடுத்துச் சொல்ல, அவருக்கும் புரிந்தது வீட்டில் உள்ளவர்களிடம் கேட்காமல் தன்னிடம் கேட்டது அவருக்கு பெருமையாக இருந்தது.
"அந்த இடத்தை மட்டும் வாங்கிட்டா, அதுக்கு மேல வர லாபத்துல நான் கடன அடைச்சிடுவேன் பெரியம்மா. ப்ளீஸ் உங்களால உதவ முடிஞ்சா உதவி செய்ங்க "என்றான்.
அதில் மனம் நெகிழ்ந்தவர்"ஏன் சைத்து நீ அம்மா கிட்ட கெஞ்சலாமா? என் புள்ளைடா நீ உனக்கும் சாய்க்கும் தான் இந்த சொத்து எல்லாம். உனக்கு கொடுக்காம யாருக்குடா கொடுக்க போறேன். சாய் கிட்ட பணத்த பேங்க்ல இருந்து கொண்டு வர சொல்றேன். பத்தலைனா நகை இருக்கு அடக்கு வச்சுக்க என்ன?"என பாசமாகப் பேசினார்.
அவனும் பழைய படி அவர் பாசத்தில் உருகிப் போனவனுக்கு அந்தப் பாசத்துக்கு பின் இருக்கும் ஆதாயம் தெரியவில்லை. அவரது பாசத்தை மட்டும் பார்த்து நம்பிருந்தான்.
ஆனால் அடுத்து அவர் பேசியதெல்லாம் அவன் மனதையும் எண்ணத்தையும் உடைத்தது. கொஞ்சம் தெளியவைத்தது கூட எனலாம்.
"தொழில் பண்ணி நீ முன்னேறத கண் கூட பார்க்கிறத விட இந்த பெரியம்மா வேற என்ன சந்தோசம் இருந்திட போகுது சொல்லு ! பெரியம்மாக்கு ரொம்ப சந்தோசம் உன் வாழ்க்கையில் நல்லது நடக்கப் போறத நினைச்சி !"என்றவர் ஒரு பெருமூச்சு விட்டு "ஆனாலும் ஒரு நெருடல் இருக்கு சைத்து கண்ணா ! "என்றார் சோகமாக
"என்ன பெரியம்மா அது ? என்ன நெருடல்?"என்றான் குழப்பமாக
"எல்லா உன் கல்யாணம் வாழ்க்கைய தான் நினைச்சி. அந்த சதிகாரி மட்டும் இடையில் வர்றாம இருந்திருந்தால் இந்நேரம் உன் கல்யாண வாழ்க்கையும் நல்லா அமைச்சிருக்கும்.. அவ எப்போ வீட்டுக்குள்ள வந்தாளோ இதோ என்னையும் என் தங்கச்சியை பிரிச்சிட்டா அடுத்து உன்னையும் என்னையும் பிரிச்சிடுவா, அப்றம் உன்னையும் உன் அம்மாவையும் பிரிச்சிடுவா ! அப்படி பட்டவள தான் உன் அம்மா மருமகனு நடுவீட்டுல கொண்டு வந்து வச்சிருக்காள். அவளை பத்தி சொன்னாலும் நம்பாம தலையில தூக்கி வச்சி ஆடுறா ! ஆனா நீயும் அவளை போல நம்பி ஏமாந்திடாத ஐயா ! அப்றம் நம்ம குடும்பத்த பிரிச்சிடவா! "என தீவிரமாக சொல்ல, அவனுக்கு தலைவலி வராத குறையாக இருந்தது 'ஏன் இங்கு வந்தோம் ?'என்றானது அவனுக்கு.
" நீ அவ கூட சேரலை தான? எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு எப்படியாவது அவளை துரத்திட வழிய பார் கண்ணா ! அம்மா உனக்கு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அம்மா மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தான. அம்மா உனக்கு நல்லது தான் நினைப்பேன் கண்ணா !"எனஅவன் முகமேந்தி சொல்ல, அவன் பதிலேதும் சொல்லாமல் அவரை வெறித்தவன்"எனக்கு மேனேஜர பாக்கணும் முக்கியமான வேலை இருக்கு நான் கொஞ்சம் கிளம்பணும் பெரியம்மா ! "என்றிட அவன் மேல் மலையளவு நம்பிக்கை வைத்து அவனை சந்தோசமாக வழியனுப்ப, அவனுக்கோ மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.
இவரிடம் பணத்தை வாங்கி அடிமையானால் வைஷுவை இழக்க நேரிடுமும் என்று மூளையும் மனதும் ஒரு சேர எச்சரிக்கை செய்ய, கனவை விட அவனுக்கு வைஷு தன் முக்கியமாகத் தெரிய, சாய்யிடம் பணத்தை மறுத்துவிட்டு வேகமாக தன் வீட்டுக்கு வந்தவன் அறைக்குள் அடைந்து விட்டான்.
அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவள், அவன் வந்ததும் அவனை காண அறைக்குச் சென்று அவனருகே உரசிய படி அமர்ந்தாள்.
"என்ன சைக்கோ சார் ! சத்தமே இல்லாம சைலண்ட் உட்கார்ந்து இருக்கீங்க? என்ன விஷயம்?"என்றாள்.
"ஒண்ணுமில்ல வைஷு. கொஞ்சம் தலைவலிகுது அதான்.. என்னை கொஞ்சம் தனியா விடேன் ப்ளீஸ்"என்றான். அவளுக்கு ஒரு மாதிரியானது.
அவன் சட்டை காலரை பிடித்திழுத்தவள், "கொன்னுடுவேன் உன்னை.... இப்படி உன்னை தனியா விட தான் நான் உன்னை கட்டிக்கிட்டேனா? ஒழுங்கா என்ன பிரச்சனை சொல்லு ! இல்ல முகர பேத்துடுவேன் !"என்று மிரட்ட, அவள் அன்பில் நெகிழ்ந்தவன் அவளை அணைத்துக் கொண்டு விஷயத்தை சொன்னான்.
,பட்டெனக் கன்னத்தில் அடித்தவள்"பொண்டாட்டி நான் இருக்கும் போது ஏன்டா யார் யார் கிட்டையோ பணம் கேட்டு அலையற? ஏன் என் கிட்ட உதவி கேட்கத் உன் தன்மானம் இடிக்குதோ ! நீ யார் கிட்ட வேணா ஈகோ பார், தன்மானம் பார் . ஆனா என் கிட்டா பார்த்த வெட்டி போடுவேன்" என்று சீறியவள் வேமாக
எழுந்து தன் நகைகள் மொத்தத்தையும் அவனிடம் கொடுத்தாள்.
"இது போதுமானு பார், இல்ல என் சேவிங்க்ஸையும் சேர்த்து கொடுக்கட்டுமா? "என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்தான் சைத்து.
"வைஷுமா இதெல்லாம் உன் நகைடி.என் கிட்ட கொடுத்துட்டு நீ என்ன போட்டுப்ப! வேணாம்டி இது "என்றவனை தீயாக முறைத்தவள்" ஆமா தினமும் இதை எல்லாம் போட்டுட்டு ஜொலிக்குதே ஜொலிக்குதேனு ஊர் சுத்துட்டு இருக்கேன். போடா ! எனக்கு கோல்ட் பிடிக்காது . இதெல்லாம் எதுக்குனா இன்னொரு பிரான்ச் திறக்கத் தான் வச்சிருக்கேன் போட்டுக்க இல்ல. அதுனால இதை பிடி. இதை வச்சு என்ன பண்ணனுமோ பண்ணிக்க நான் ஏன் கேட்க மாட்டேன். ம்ம் எடுத்துக்க "என அவள் சொல்ல, சிறு பிள்ளையாய் அவள் மடி சேர்ந்து அழுது தீர்த்தான். நெற்றியில் இதழ் பதித்து அவனை அணைத்து கொண்டாள்.
***
கண்ணில் கர்வம் மின்ன , கேலியாக இதழை வளைத்து வைஷுவைப் பார்த்து சிரித்தப்படி ரிப்பனை வெட்டி அந்தக் காம்பிளக்ஸை திறந்து வைத்தார் சரஸ்வதி .
வைஷுவோ அதைப் பெரிதும் கண்டு கொள்ளாதவள் ஆர்வமாக உள்ள செல்ல அவளுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேரக் கொடுத்தான் அவளது காதல் கணவன்.
Comments
Post a Comment